You are hereஐ.டி கம்பெனியில் வர்ணாஸ்ரமம்

ஐ.டி கம்பெனியில் வர்ணாஸ்ரமம்


By panbudan - Posted on 09 January 2012

தேதி: : 
Tuesday, January 10th, 2012
  ERaghuram

காஞ்சி ரகுராம்

’இன்று’ என்னும் தளத்தில் பல கோவை எழுத்தாளர்களுடன் இணைந்து எழுதிக் கொண்டிருக்கும் காஞ்சிபுரத்துக்காரர் இவர். நீங்கள் ஒரு கட்டுரை தரமுடியுமா என்றுக் கேட்ட மறுநாள் கட்டுரையை அனுப்பி விட்டார். 

linesep

“நீ என்ன ஜாதி தம்பி?”

 அந்த முதியவர் கேட்ட போது என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. பள்ளத்தில் சைக்கிள் இறங்கியதால் விழுந்துவிட்டவரை தூக்கி உட்கார வைத்திருக்கிறேன். அவருக்காக ஹேண்டில் பாரை சரி செய்த போதுதான் அக்கேள்வியைக் கேட்டார்.

இப்போது அவருக்குப் பிடித்த ஜாதியில் நான் இல்லாவிட்டால் மீண்டும் ஹேண்டில் பாரை திருகிக் கொண்டு விழுந்துவிடவா போகிறார்?

“உங்களுக்கு உதவின ஜாதி... பாத்து போங்க...” அனுப்பி விட்டு நடையைத் தொடர்ந்தேன்.

பெற்ற உதவிக்குக் கூட ஜாதி பார்த்துதான் நன்றி சொல்வார்களா? மக்களின் பாதுகாப்பும், வாழ்க்கைத் தரமும் உயர வகுக்கப்பட்ட வர்ணாஸ்ரமம் கால மாற்றத்தில் இந்தளவிற்குத் திரிந்துவிட்டது வேதனை. இதன் நோக்கத்தை ஐ.டி துறையைக் கொண்டு விளக்குகிறேன்.

நான் பணிபுரியும் ஐ.டி கம்பெனியுடன் வியாபார ரீதியாக தொடர்பிலிருக்கும் கம்பெனிகளுக்கு,  புதிய ப்ராஜெக்டை ஆரம்பித்து வைக்க அல்லது இயங்கிக் கொண்டிருக்கும் ப்ராஜெக்டில் ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்க்க நான் செல்வதுண்டு. அந்தக் கம்பெனிகள் எனக்கென பிரத்யேகமாக அடையாள அட்டையைத் தரும். அது அவர்களுடைய வழக்கமான அட்டையைப் போலவே இருந்தாலும், வேறு நிறத்தில் இருக்கும்.

ஒருநாள் ஒரு கம்பெனியில் தீவிர விவாதத்தில் இருந்தேன். எனக்கு ஒதுக்கப்பட்ட அறையில், ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு மேல் விவாதத்தைத் தொடர்ந்திருக்கிறேன். அந்த நேரத்தில் அந்த அறையை ரிசர்வ் செய்திருந்த நபர், பொறுமையிழந்து கத்திக் கொண்டே, என்னைத் திட்டிக் கொண்டே வந்தார். உடன் இருந்தவர்கள் குறுக்கிடக் காட்டிய தயக்கம், அவரின் பதவியை உணர்த்தியது.

“என்ன பிரச்சனை சார்?” எழுந்தபடி கேட்டேன். என் அடையாள அட்டையின் நிறம் அவர் கண்ணில் பட, சட்டென நிதானத்திற்கு வந்தார்.

அது வேறு கம்பெனியிலிருந்து வரும் டொமெய்ன் எக்ஸ்பர்ட்டை (Domain Expert) குறிக்கும் முதல் வர்ணம்.

“இங்கே ஒரு முக்கிய மீட்டிங் நடத்த வேண்டியிருக்கிறது. உங்களுடையது எப்போ முடியும்?”. இப்போது அவர் குரலில் கண்ணியம் தெரிந்தது. இந்த வர்ண ஜாலம்தான் வர்ணாஸ்ரமத்தின் அடிப்படை.

எந்த ஐ.டி ப்ராஜெக்டாக இருந்தாலும் நான்கு குழுவினர்களின் பணி முக்கியமானவை.

1. ப்ராஜெக்ட் சம்பந்தமான அறிவியல் அனுபவத்துடன் ப்ராஜெக்டை வடிவமைத்துத் தரும் குழு - டொமெய்ன் எக்ஸ்பர்ட்ஸ் (Domain Experts).

2. முதல் குழுவின் வழி காட்டுதலின் படி Java, .Net போன்ற கணினி மொழிகளைப் பயன்படுத்தி ப்ராஜெக்டை உருவாக்கும் குழு - டெவலப்பர்ஸ் (Developers).

3. உருவாக்கப்பட்டதை விற்பனை செய்யும் குழு - சேல்ஸ் (Sales).

4. ப்ராஜெக்ட் நிறுவப்படும் இடங்களில் அதை இயங்க வைக்கும் குழு - ஆபரேஷன்ஸ் (Operations).

இந்தக் குழுக்கள், அதனதன் பணியைச் சரியாகச் செய்தால்தான் ப்ராஜெக்ட் வெற்றிகரமாக இயங்கும். இவர்களிடையே அனுசரணையும் முக்கியம். சேல்ஸ் குழுவின் மூலம் வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து, ஆபரேஷன்ஸ் குழுவின் மூலம் நடைமுறை சிக்கல்களை அறிந்து, டொமெய்ன் எக்ஸ்பர்ட்ஸ் குழு மேலும் வழிகாட்டுவதை டெவலப்பர்ஸ் கடைபிடித்தால்தான் ப்ராஜெக்ட் மேற்கொண்டு வளரும்.

ப்ராஜெக்டை இப்படி வளர்ப்பதைப் போலவே, சமுதாயத்தை வளர்க்க, ப்ராஜெக்ட் குழுக்களைப் போலவே நான்கு குழுக்கள் அன்றைய நாளில் நியமிக்கப்பட்டன. அறம் வளர்ப்பவர், அதன்படி நாட்டை நடத்திக் காப்பவர், வருவாய் ஈட்டுபவர், இயக்கத்திற்கு உழைப்பவர்.

சில ஐ.டி கம்மெனிகள் அவுட் சோர்சிங் (Out Sourcing) முறை மூலம் வேறு கம்பெனிகளிலிருந்து இக்குழு நபர்களை வருவிக்கும் போது, அவர்களின் பணியை மற்றவர் உணர்ந்து நடந்து கொள்ள வர்ண அடையாள அட்டைகளைத் தருகிறது.

அன்றைய நாளில்,  போட்டோ அடையாள அட்டையை கழுத்தில் தொங்கவிட்டுக் கொண்டு பந்தா காட்டுவது கண்டுபிடிக்கப் படாததால், வண்ணத் துணிகளை தலையில் பாகையாக, இடையில் கச்சையாக, தோளில் பட்டையாகக் கட்டிக் கொண்டார்கள் என நினைக்கிறேன். வெள்ளை, சிவப்பு, பச்சை, கறுப்பு போன்ற நிறங்களும் பயன்படுத்தப்பட்டிருக்கக் கூடும்.

கல்லூரி முடித்து மாணவர்கள் கம்பெனியில் சேரும்போது, முதலில் அனைவருக்கும் பொதுவான பயிற்சி அளித்து, அதில் அவர்களின் தேர்ச்சியை, திறமையை வைத்து, நான்கு குழுக்களுக்குள் ஒன்றை ஒதுக்கி, அதற்கான பிரத்யேக பயிற்சிக்குப்பின் அவர்கள் பணியில் அமர்த்தப்படுகிறார்கள்.

இப்படித்தான் வர்ணாஸ்ரமமும் தகுதியின் அடிப்படையில் நாட்டை உருவாக்கும் நோக்கத்துடன் தோன்றியதே. வனப் பகுதியிலிருந்து, வளப் பகுதிக்கு நகர்ந்த மனிதனுக்கு ஜாதி ஏது?

ஒரு நோக்கம் நிறைவேறியபின் அதற்கான முனைப்புகள் அர்த்தம் இழக்கின்றன.

இயங்கத் தொடங்கிய ப்ராஜெக்ட் மேலும் விஸ்தரியும் போது, அதன் குழுக்களில் புதிய நபர்கள் சேர்கிறார்கள். பழையவர் வேறு கம்பெனிக்குத் தாவுகிறார்கள். சிபாரிசில் சிலர் நுழைகிறார்கள். இவர்கள் அடிப்படையையும், நோக்கத்தையும் தெரிந்து கொள்ள முயலாமல், எதையாவது செய்து ப்ராஜெக்டை சொதப்புகிறார்கள். பிரச்சனைகள் முளைக்கத் தொடங்குகின்றன. பழியை ஒருவர் மீது  ஒருவர் சுமத்த சண்டைகள் ஆரம்பம். இன்று இந்த நான்கு குழுக்களும் அடித்துக் கொள்ளாத ஐ.டி கம்பெனிகளே இல்லை.

வர்ணாஸ்ரமமும் சந்ததி வளர்ச்சியில், மதங்களாகி, ஜாதிகளாகி சில சாரார் மட்டுமே உயர, பல இடங்களில் எப்போதும் கலவர நிலவரம்.

ஐ.டி கம்பெனிகளெல்லாம், செலவுகளைக் குறைக்க, ஆட்களைக் குறைக்க க்ளவுட் கம்யூட்டிங் (Cloud Computing) என்ற அடுத்த கட்ட டெக்னாலஜியை நோக்கி நகரத் தொடங்கிவிட்டன.

இது ஐ.டி குழுக்களின் உட்பிரிவுகளை கணிச்சமாகக் குறைக்கும். அது போல ஜாதிகளும் குறைந்தால் சரி.

linesep

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <p> <span> <img> <div> <pp_img> <pp_media> <h2> <h3> <h4> <h5> <h6> <br> <blockquote> <table> <tbody> <tr> <th> <td>
  • Insert images and media with <pp_img> or <pp_media>. See formatting options for syntax.

More information about formatting options

CAPTCHA
சிரமத்திற்கு மன்னியுங்கள் நண்பர்களே! சில வாரங்களாக ஸ்பேம் பின்னூட்டங்கள் அதிகரிப்பதால் இந்த சோதனையை சேர்த்துள்ளோம்.
Image CAPTCHA
Enter the characters shown in the image.